காலகால மாக இங்கு வாழும் மெய் உயிர்ப்புகள்,
கல்லை மண்ணை நீரை தீயை காற்றை ஆளும் ஓர் பொருள்,
சூலை – விந்து சேரவே வளர்ந்து வாழுமாம் உயிர்,
சூழும் தாவரத்தில் பூவை – வித்து ஆக்கும் மாதிறண்,
காலிலாதியங்கி வையம் காக்க நிற்கும் சக்திகள்,
கர்மம் தீவினைகளுக்குத் தோன்றும் தண்டனை, இவை
போல ஆயிரம் பலங்களோடிருக்கு இப்புவி!
புத்தியாலே மட்டும் யாவும் காணல் கஷ்டம்… நீ புரி!
எம்புலனுள் சிக்கிடாத நூறு சக்தி உள்ளன.
எம் புலன் உணர்வின் கீழும் மேலும் உள்ளவை பல.
நம்பு ‘வெள்ளொளிக்கு’ மேலும் கீழுமே அதிர்வுள.
நமது அங்கம் தேறிடா ‘அலை’வகைகள் உள்ளன.
இம்மண் காற்று நீரில் நுண்ணங்கி கோடியுள்ளன.
இவற்றைக் காண, கேட்க மனிதர் கண்ட கருவியுள்ளன.
“தம்பிடேய் அறி”; “உனக்குள் எட்டிடாதவை இலை-
தான்” என்றெள்ளல் பேதமை; அவற்றைத் தேடு… பின் கதை”
நீ அறிந்திடா துணர்ந்திடாத கோடி மர்மங்கள்
நின்னைச் சூழ்ந்து உள்ளதே; அவற்றிலுள்ள மெய்ப்புதிர்…
நீ அவிழ்க்க ஆயுளொன்றுனக்குக் காணுமா? உணர்!
நிர்ணயிக்கும் ‘தெய்வ, சக்தி’ அப்புதிர்க்குள் உண்டு; அறி!
கோடி கோடி பேர் பிறந்து வாழ்ந்துமே மறைந்தும் என்?
கொண்ட கோலம் கொள்கை மாறிடாது சுற்றும்… இப்புவி!
யாவுமோர் ஒழுங்கிலோடும்; நீ ஒழுங்கை மாற்றிடில்…
யாது மிஞ்சும்? முன்னவர் உரைத்த வாறு வாழு நீ!