வேலன் விழா.

“யாரெவரும் எப்படியும் வாழட்டும்
இப்படித்தான்
வாழ்வேன்” எனவாழும் ‘இலட்சிய வாதியை’ப்போல்…

யாரெவர்தான் எதையும் செய்யட்டும்;
அவர்கள் எங்கும்
வாண வேடிக்கை விடட்டும்;
அவர் ஏற்றும்
கூடிய ஒளிவிளக்கூர்
கண்ணை உறுத்தட்டும்;
சாமி எழுந்தருளச் சத்தமாய்
சினிமாவின்
பாடல்கள் நாத சுரந்தவிலில் முழங்கட்டும்;
ஆடட்டும் ‘அந்நிய மயில்கள்’ கவர்ச்சியுடை
பூண்ட படி;
மேடையிலே ‘சூப்பர் சிங்கர்’ பொழியட்டும்;
வேர்கள் அதிர ‘DJ’ விளைக்கட்டும் பக்திகீதம்.
காதைக் கிழிக்கட்டும் ‘செண்டைமேளம்’;
வெடி முழக்கம்
ஊரை உலுக்கட்டும்;
உறவுகள் ஒன்றுகூடிக்
கோடிகளைக் கொட்டி கொண்டாடும் தின விழாவில்
பேசட்டும் உபய காரரின் பெருமைகளை.
சாமிக்குச் சாத்திய
‘மாம்பழ ஏலத்தால்’
கோவில் களில்பல லட்சங்கள் குவியட்டும்.
‘வேள்வி’ எனும்பழைய
மிருக பலியிடலால்
ஆலய அயலெல்லாம் இரத்தமாறாய்ப் பாயட்டும்.
“காவலர் நாம்” எனும்முகநூல்
‘கருத்து மறவர்கள்’
பாவ உயிர்வதையை,
பரவுகிற புதுபுதுக்
கூத்துகளை, நடக்கும் கொடுமை சிறுமைகளை,
சீத்துவக் கேடுகளை
பார்த்தூமை ஆகட்டும்.
யாரெவரும் கூடி எதையும் இரசிக்கட்டும்.
யாரெதையும் எப்படியும் செய்யட்டும்;
திருவிழாவின்
யாவாரச் சந்தைகளில் யாரும் பிழைக்கட்டும்.
“நானென் நெறிபிசகா நடைமுறையில் விழாவெடுப்பேன்
காண்” என்று நல்லைக் கந்தன் பெருவிழா
ஆண்டாண்டாய் வந்து அமைகிறது!

அலங்காரச்
சோடனைகள் விதவிதமாய் மனதைத்
தொடும்வகையில்,
நாளும் ஒரு பொலிவில்,
நகைகள் புதுவடிவில்,
நாதசுரம் தவிலும்
நல்ல மரபிசையில்,
நாளுமொரு ‘பாரம் பரியம்’ உள் வீதியினில்,
தேவாரம், முருகநாம பஜனை, நாதஸ்வரத்
திருப்புகழ், தாள வாத்யம்,
வளை குழலோசை,
நந்தனார் தரிசனம், பூத நடனம், நாத
பஞ்சரத்னம், வேத பாராயணம், மிருதங்க
இலயம், திருப்புகள், மணியோசை, வகைவகை
மலராலே அர்ச்சனை,
புல்லாங்குழல், பரதச்
சமர்ப்பணம், பட்டிப் பொங்கல்,
இவற்றோடு
தமிழிற்கும் சம உரிமை…
தமிழிசைக்கு முன்னுரிமை…
அமிழ்தான ‘கந்தர் அநுபூதி’ அதைத்தொடர்ந்து
‘திருவாசகம்’ ஓதிப் பொருளுரைத்தல்,
அதால் பரவும்
பெரும்புனிதம்
மாரியாய்ப் பெய்து மண்ணைக் குளிர்த்திடையில்…
மண்டபப் படிகளிலே ‘அடியாரின் ஆலாத்தி’,
பொன்னாய் இளையோரை புடம்போடும் பஜனைநெறி,
சிறுவர்க்கும் விழாவாய் ‘பாலஸ்க்கந்தர்’ ‘தங்க
இரதமேறச்’ சிறாரும் ஆன்மீகம் பயிலவழி,
பந்தல்களில் தாகம் களைதீர்க்கச் செயுமுதவி,
அன்னதான மடங்களிலே அவி,
அடியார் தோள்களிலே
சாமிகாவப் போட்டி,
சுவாமிகள் முன் கற்பூரத்
தீபச் சுடர்ச்சட்டி, தீவெட்டி,
கூவுகிற
‘சேவல் மொழி’, நிதமும் வெவ்வேறு நம்பண்டைச்
சமய விழுமியங்கள் சங்கமிக்க வரும் பவனி,
எமது மரபுக் கருவி வகைகளுடன்
திருச்சின்னம், சங்கு, எக்காளம், நெடுந்தாரை,
வரிசையாய் வளைகுழல், சேர்…
கொம்புவாத் தியங்களின் ஒலி,
பாரம் பரிய உடை,
பக்திக்கே முன்னுரிமை,
சேவகராய் சிவப்புச் சால்வைகட்டித் தொண்டர்கள்,
சாத்துப் படிநிறத்தில் குருக்கள்மார் வாத்திய
காரருக்கும் வேட்டி,
‘கட்டியக்’ கம்பீரம்,
ஒருமுகத் திருவிழாவில்
அட்டதிக் கறிந்த ‘வரவேற்புத் துதி’, என்று…
களியாட்டம் அற்று கலக்கும் ‘நல்லை
அலங்காரன்’
திருவிழா!
‘கோவிற் சட்டம்’ சிறிதும் மாறா
நெறிமுறையை… நேரம் தவறா
நியமத்தை…
அயலெங்கும் இசையும் பாட்டும்
உயிர்ப்பிக்கும்
பகலிரவை…பக்தி உணர்வு பூர்வமாய்ப் பெருகும்
தெய்வீகச் சூழலை… இவை எம் தனித்துவத்தின்
வைபோகம் என்று வரையறுத்து;
“இப்படித்தான்
திருவிழா செய்யவேணும்” என்றுரைத்து;
திசைவியக்க
வரலா றமைத்துச்; செய் நேர்த்தியால் புவியைஈர்த்து;
சகலருக்கும் உதாரணமாய்…
யார்க்கும் முன்னோடியுமாய்…
வழிவழியாய்க் காத்த மரபு பிசகாமல்,
அழகு ஒழுங்கு யார்தான்
மாறினாலும் மாறாமல்,
பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய்…
ஓர் மாதம்
உலகத் தமிழ்ச் சைவ உயிர்விழாவாய்…
திருநல்லூர்
ஆலயப் பெருவிழா அமைகிறது!
இன்றைக்கும்
“யாரெவரும் எப்படியும் வாழட்டும்
இப்படித்தான்
வாழ்வேன்” எனவாழும் ‘இலட்சிய வாதியை’ப்போல்…
‘வேலன் விழா’ நம் விழுமியம், கலாசாரம்,
யாழின் தனித்துவத்தைக் காத்துச்
சிறக்கிறது.

Posted in கவிதைகள் | Comments Off on வேலன் விழா.

அருள் …கார்த்திகையில்

எதுதான் முடிவு எனவும் தெரியோம்.
எதுதான் விடிவு எனவும் தெளியோம்.
விதிஎவ் வழிபோ கவிடும் புரியோம்.
வினைஎன் னபழி தருமோ அறியோம்.

எனினும் திமிராய் எமையும் வியந்தே
எதுவும் தெரியும் எனவும் நடந்தே
கனவில் அலைவோம் நனவில் நலிந்தே
கதியற் றுயிரும் அலைவோம் மெலிந்தே

நானென் றிடும்ஆ ணவமும் பணிய
நாம் ஏ துமிலாச் சடமென் றுணர
ஈனம் இழிவு முழுதும் அழிய
ஏவு வடிவே லதையாம் நிமிர.

வெறு(ம்)மா யையினால் விரிஏக் கமதும்,
வினையின் விளைவால் மிகுதாக் கமதும்,
எரி…பன் னிருகண் சுடரின் ஒளியால்.
எமைத்தங் கமெனப் புடம்போட் டிடுவாய்.

திரளும் அவுணர் திறணைப் பொடிசெய்.
தெருவில் அசடர் திரிவர் தடு பொய்.
வரங்கேட் டுஅழும் வலுவற் றவர்கள்
மலர…வலியோர் தொலைய வரம்…பெய்.

எழில்’நல் லையிலே’ இருதே வியரோ-
டெழும் வேலினிலே உறைவே லவனே!
அழகே, அறிவே, அறமே, அடியாரக்
கருள்; ‘கார்த் திகையில்’ அவலம் அறவே!

Posted in கவிதைகள் | Comments Off on அருள் …கார்த்திகையில்

ஒதுங்குவோம் உன் அடி நிழலில்

யானொரு கருவி நீயே தான் சுருதி
யாதையும் பார்த்துக்கொள் நீயே!
யான் விடும் பிழை, என் சரி, நன்மை தீமை,
என்வெற்றி தோல்வி, நோய் சுகமும்,
யாவுமுன் செயலே! யான் வெறுஞ் சடமே!
எனை இயக்கும் சக்தி நீயே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஒதுங்குவோம் உன் அடி நிழலில்

வேலனுக்கார் ஈடு?

நல்லை ஊரை நம்பி நிதம் நாடு – அது
ஞான நிழல் நல்கும் எழிற் காடு.
வல்வினையில் வைக்கும் வேலும் சூடு- உந்தன்
வாழ்வைமாற்றும் வேலனுக்கார் ஈடு? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேலனுக்கார் ஈடு?

நல்லூர்த் திருவிழா!

அண்டிவரும் பக்தருக்கு அள்ளிஅள்ளியே – செல்வம்
அத்தனையும் தந்துயர்த்தும் அன்னைத் தெய்வமே!
குண்டு, போர், பிணி, அனர்த்தம் சூழ்ந்த போதிலே -கொற்றக்
குடை, அரணாய்க் காத்தணைத்த நல்லை வேந்தனே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூர்த் திருவிழா!

தேற்றி அருள்புரி.

எல்லையில் லாத எழில்கள் புனைந்து
எப்போதும் புன்னகை பூத்து,
எவரெவர் வந்து இருந்து எழுந்து
இழகி அழும்போதும் பார்த்து,
தொல்லைகள் தீர்த்து, துணிவுளஞ் சேர்த்து,
தோல்விப் பயம் ஓட ஆர்த்து, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தேற்றி அருள்புரி.

துணை நில்

கடலா கியநின் கருணைக் கரையில்
களையா றிடுமோர் கணம்வாய்த் திடுமோ?
உடலா றிடுமோ? உயிரா றிடுமோ?
உணர்வூ றியவா ஒருவார்த் தையுரை! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on துணை நில்

உயிர்ப்பின் எழில்

சோடனைகள் விதவிதமாய்ச் சோடனைகள்
வகைவகையாய்ச்
சோடனைகள் என்றாலும் சோபிக்க வில்லைஏதும்!
சோடனைகள் அதனைத் தூக்கி நிறுத்தவில்லை!
ஏனென்றால் சோடிக்கப் பட்டதுவோ
உயிரற்ற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உயிர்ப்பின் எழில்

விண்ணை உலுக்கும் வினாக்கள்.

இன்னுமின்னும் தோண்ட எத்தனை கூடுகள் வந்திடும்? -அவை
என்ன கொடிய கதைகளை ஊருக் குரைத்திடும்?
என்ன நடந்தது யாரிவர்கள் எனும் ஐயமும், – அட
என்னதான் மூடு மந்திர மென்கிற அச்சமும்,
இன்னும் அவிழாப் புதிராய்த் தொடருதே ஏனடா? -நிதம்
எண்ணிக்கை சொல்லிக் கடந்து நாம் போறமோ? கூறடா! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on விண்ணை உலுக்கும் வினாக்கள்.

சுப்பிரமணி

நடக்கத் தொடங்கையிலே யார்க்கும் இடைஞ்சலில்லை.
இடையில் இணைகையிலே எவரும்
தடுக்கவில்லை.
உடையோன் பின் வந்ததென்று
ஊர் முறையிட்டதில்லை.
நானே உரிமையாளன் எனயாரும் சொன்னதில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சுப்பிரமணி

காக்க முயன்றால்

கலையாத கனவோடு நனவின்று வாழும்.
கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம்.
விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம்
விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்

இதுவா நேர்வழி?

என்னதான் வசை? எங்கு பார்க்கிலும்
ஏனடா மனக் காழ்ப்புகள்?
ஏன் பொறாமைகள்? போட்டி பூசல்கள்
ஏன் பெருகுது தூற்றுதல்?
நின்று நன்மைகள் செய்பவர்க்குக் கை
நீட்டிக் குற்றம் சுமத்தலேன்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இதுவா நேர்வழி?

காக்கும் இறை.

எதுவரும் பொழுதிலும், இடர்சுடும் நொடியிலும்,
இடிகளே வீழும் கணமும்.
“எவையுமே தாக்காது எனை”யென் றெனக்குளே
எழும் ஒரு அசரீரியும்.
சதிபல செய்யினும், தருமம் பிழைப்பினும்,
தவிர்த்து…மெய் தனை ஏய்பினும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்கும் இறை.

நெஞ்சோடு புலம்பல்.

ஏற்றிட முடியா இந்த
இழப்பினுக் கெதைநாம் செய்வோம்?
கூற்றுவன் கொடுமைக் காரன்…
குணநலம் குறைந்தோன்… கண்டோம்.
நேற்றிந்த நேரம் நின்றோன்…
“இன்றில்லை” என்ற உண்மை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நெஞ்சோடு புலம்பல்.

தீயவர் மாய்வர்.

மாய மந்திர ஜாலம் நிறைந்ததாய்,
மர்மப் பொய்கைகள் சுண்டி இழுப்பதாய்,
மாயைகள் புரி வல்லவர் சூழ்ச்சிகள்
வைத்து மயக்கி விழுத்தத் துடிப்பதாய்,
ஏய்த்து ஏமாற்றி ஆசைகள் காட்டிடும்
எழில்கொள் மோகினிப் பேய்கள் நிறைந்ததாய், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தீயவர் மாய்வர்.