நீதியும் நியாயமும் நீர்த்து நொடிந்திடும்
நேரத்தில் வந்து பிறந்துவிட்டோம்.
நேர்மையாய் வாழ்ந்து நெருக்கடிகள் பட்டு
நித்தம் துயரம் சுமந்திருப்போம்.
போதனை வேறு, நடைமுறை வேறெனும்
பொய்மை உலகினில் தான் அலைவோம்.
புத்தனும் சித்தனும் சொன்ன மறைகள்
பொருந்துமோ இன்றைக்கு? யார் தெளிவோம்?
தீமை விளைப்போர், அதர்மர், அராஜகம்
செய்வோர், அடாவடியாய் முயல்வோர்,
தீதெனக் கண்டும்…தம் ஆணவம் கன்மத்தால்
தேடிப் பழி வினை சேர்த்திடுவோர்,
காமக் கொடூரர்கள், மற்றோர் கருத்தின்
கழுத்தை அறுத்து உயிரெடுப்போர்,
காழ்ப்பை விதைத்துப் பொய்க் காயை அறுவடை
காண்போர், ஜெயிப்பதைக் கண்டதிர்வோம்!
உண்மை நொருங்கி, உடைந்தொரு ஊமையாய்
உள்ளது என்ற நிலையினிலும்,
ஓய்ந்து உயிர்விட்டுச் செத்துச் சிதையலை…
ஊர் முன்னர் வெல்லு திடைக்கிடையும்!
எண்ணி நாம் பாரா முடிவொடு, தண்டனை,
இன்ப அதிர்ச்சியும், மாற்றங்களும்,
எங்கும் நிகழ்ந்ததர்மத்தைப் பொய்களை
ஈற்றில் விழவைப்பதும்…நடக்கும்!





