நல்லூர் கொடியேறி விட்டால்
அதன் நாற்திசையும்
பல்வேறு கொண்டாட்டம்.
பக்தித் திருவிழாக்கள்.
அவற்றின் விசேசம்,
அவற்றின் தனித்துவம்,
அவற்றின் அழகு,
அவற்றினது நேர்த்தி,
அவற்றினான்ம அதிர்வு,
அவற்றின் பரவசம்,
இவைதாண்டி எத்தனையோ…
வெளிவீதியைச் சுற்றி
நடந்தேறும்;
எல்லாமும் நன்றாய்த்தான் நிகழ்ந்தேறும்!
தடைகள் தகரும்.
சந்தேகங்கள் விலகும்.
நடக்க வேண்டியவை நடக்கும்.
எதுவரினும்
நடக்க வேண்டியது நடக்கும்.
விழா நாளில்
கடைதெருவைச் சுற்றிக் களியாட்டம்.
வியாபாரம்.
எப்படிப் பிழைக்கலாம் எனும்போட்டி.
இதற்குள்ளும்
எப்படி உழைக்கலாம் எனும்கேள்வி.
பேர் புகழை
எப்படிப் பெருக்கலாம் எனும் வேள்வி.
விளம்பரங்கள்
எப்படிப் பெறலாம் எனும்சோலி.
மண்டபங்கள்
எங்கும் பெருங் கச்சேரி.
அவற்றில் ஈடில் முருக துதி.
எங்குமவன் புகழ்ப் பஜனை.
இசை, நடனம், பேச்சாலே
மனக்குறையைச் சொல்லல்.
மண்டபப் படிகளிலே
தினம் பிரசாதமிடல்.
தண்ணீர்ப் பந்தல்கள்
தனிலே அடியவர்க்குத் தாகசாந்தி.
அன்னதானம்
தினமும் வழங்கும் திருமடங்களில் குறையா
அவியல்;
‘செலவு’ பற்றி அலட்டாது
குவிகின்ற நேர்த்தி.
குகனுக்கு அர்ப்பணமாய்
கவிப்பொழிவு, காவடிகள்,
அங்கப் பிரதட்டை,
கற்பூரச் சட்டிகள் காவுதல்,
கலையாடல்,
‘அற்புதன்’ அவன்பின் அடியளிப்பு,
பாற்செம்பு
எடுத்தல், பகலிரவு என்றிராமல்
விரதங்கள்
பிடித்தல், பிறநாடு ஊர்களிலிருந்து வந்து
வடமிழுத்துக் கொம்புகாவி…
எப்படிப் போனதெனப்
புரியாத வாறு போனதிந்தப் பொன்நாட்கள்!
இருக்குதோ இறைசக்தி இல்லையோ…
கந்தவேலன்
இருக்கிறானோ இல்லையோ…
“இருக்கிறான்” எனும் முடிவில்…
இருக்கெமக்கும் புரியாத சக்தி
எனும் சிந்தனையில்…
பெருந்தொண்டு, சேவை,
பிரதிபலன் பாராத
நிதிவழங்கல்,
காணிக்கை நிறையக் கொடுத்தல்,
என…
வெவ்வேறு ஆட்கள்
வெவ்வேறு செயற்பாட்டில்
தெய்வஅருள் தேடித் திளைப்பார்கள்!
‘நல்லூரான்’
வேலாய், அறுமுகனாய்,
முத்துக் குமரனுமாய்த்,
தான்வருவான்; தங்க, ஐம்பொன் சிலையாய்!
அவன்
நேரில் சிரிப்பதில்லை.
நின்று கதைப்பதில்லை.
யாரையும் வாழ்த்தவில்லை.
தண்டித் ததுவுமில்லை.
யாருக்கும் கையால் எடுத்தேதும் கொடுத்ததில்லை.
ஆனால்… அவன் அவர்கள்
‘அகத்தில்’
சிரிப்பதனால்….
ஆமாம்… அவன் அவர்கள் கனவில் கதைப்பதனால்…
ஆரும் …குகனை அருகில் உணர்வதனால்…
ஏதோ வழியிலவன் எப்படியோ
‘அரூபமாகப்’
பேசி மகிழ்வதனால்,
பிழையைத் திருத்துவதால்,
ஆசி வழங்குவதால்,
ஆதரவு நல்குவதால்,
சொல்ல முடியாச் சுமையை இறக்குவதால்,
அல்லல் அறுப்பதனால்,
ஆனந்தம் ஆக்குவதால்,
வல்லமையும் கேட்ட வரங்களும் கொடுப்பதனால்,
உள், வெளி, நோய் வலிக்கு…
ஒளடதம் ஒத்தடமும்
அள்ளி உவந்து வற்றா
அருளை வழங்குவதால்,
எல்லோரும் திருவிழாவில் ஏங்கித் திரிந்திருந்தார்.
பல்வேறு துயர்தீரும் எனப்பார்த் திருக்கின்றார்.
நெஞ்சுள்ளே நிம்மதி நிறையுமென நம்பித்
தஞ்சம் அடைகின்றார்.
தம்தம் தகுதிக்கு
ஏற்ற வழிகளிலே இறைஞ்சுகிறார்.
“நல்லைவேலன்
தேற்றித் துணைநிற்பான்.
தேவைகளைத் தீர்த்துவைப்பான்.
கைவிடான்” என்ற
காலகால நம்பிக்கை
உய்யவைக்கும்;
‘நல்லூர்’ எம்
உணர்வோடு ஒன்றி வாழும்!





