இன்னுமின்னும் தோண்ட எத்தனை கூடுகள் வந்திடும்? -அவை
என்ன கொடிய கதைகளை ஊருக் குரைத்திடும்?
என்ன நடந்தது யாரிவர்கள் எனும் ஐயமும், – அட
என்னதான் மூடு மந்திர மென்கிற அச்சமும்,
இன்னும் அவிழாப் புதிராய்த் தொடருதே ஏனடா? -நிதம்
எண்ணிக்கை சொல்லிக் கடந்து நாம் போறமோ? கூறடா!
வன்முறை நூறு நடந்ததன் சாட்சியைப் பாரடா – இந்த
மர்ம முடிச்சை அவிழ்த்துண்மையைக் காலம் சொல்லுமா?
அமர்ந்த நிலையினில் வாயைப் பிளந்து விண் நோக்கியே – ஒன்று
அண்மையில் வந்தது; என்ன கொடுமை நிகழ்ந்ததோ?
எமர்கள் இருத்தியே வைத்து உயிரைப் பறித்தரோ? – இந்த
இருதயம் எப்பழி பாவங்கள் குற்றம் புரிந்ததோ?
எமக்கு விளங்கலை ஏதும்; இணைந்தும், பிரிந்தும், இங்-
கிளையர், பெரியவர், ஆண் பெண், எனப் பல கூடுகள்
தமைவெளிக் காட்டித் தமது துயர் வலி சொல்லின – இந்தத்
தரையினில் எத்தனை இன்னும் வெளிவர வுள்ளன?
கண்டெடுக்கப் பட்ட சான்றுகள் ஆதாரம் உள்ளதே – இனங்
காட்டி “இவரிவர்” என்றெவரும் கூற வில்லையே!
உண்மையெது? எவர்? யார்? எங்கு? எப்போ? என்னதான்? – நடந்
துங்கு புதைந்தன இத்தனையும்? யாவர் காரணர்?
எண்ணிக்கை மொத்தமும் எத்தனை? இந்த இடத்தினை – விட
எங்கு எங்கு வேறு உள்ளன? என்னும் வினாக்களே…
விண்ணை உலுக்கின! ஆம் இது ஓர் ‘இடுகாடல்ல’ – ஏதோ
வில்லங்கமே… புதைந்தின்று வெளியில் வருகுதாம்!
இவற்றின் சதையும், நிணமொடு தோலும், குருதியும், – மன
எண்ணமும், ஏக்கமும், நெஞ்சில் புதைந்த இரசியத்
தவிப்பும், உதிர்ந்துமே உக்கிச் சிதைந்தது இங்கொடா? – மிஞ்சும்
‘சட்டகமாம் என்பே’ சாட்சிகள் சொல்லக் கிளம்பிற்றா?
இவைகள் சுமந்த அவலம், பயம், வலி, தம்மையா? -இந்த
எச்சங்கள் பேசத் துடித்தன? வார்த்தைகள் கேட்குதா?
கவிதை எழுதி ‘இவைக்கு’ எதும் நன்மை சேருமா? -காலம்
கடக்க…’இவை’ வெறுங் காட்சிப் பொருளாய்ச் சிதையுமா?





